பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுமார், 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
இதற்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில், யாகசாலை மண்டபம் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவிலில் இருந்த கொடி மரம், நிறுவப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டதால், கொடிமரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, கடந்தாண்டு, ஜனவரி மாதம், கேரள மாநிலம், சபரிமலை அருகே உள்ள பாலா என்ற பகுதியில் இருந்து, 57 அடி உயரமும், 5.5 அடி விட்டமும் கொண்ட தேக்கு மரம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
4 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மரத்தை, உபயதாரர் கோவிலுக்கு தானமாக வழங்கினார். இதனை, கடந்த ஓராண்டாக, கோவில் அருகே உள்ள மண்டபத்தில் வைத்து, உரிய முறையில், தயார் செய்தனர். கோவிலில் உள்ள பழைய கொடிமரம், பாதுகாப்பாக அகற்றப்பட்டது. தொடர்ந்து, 57 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.