வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உயிரியல் முறை! விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தல்
பொள்ளாச்சி : 'தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும்,' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில், வெள்ளை ஈ தாக்குதல் அதிகளவு தென்படுகின்றன.வெள்ளை ஈ தாக்கப்பட்ட இலைகளின் உட்பகுதியில் சுருள், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படுகிறது.
இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது.
இவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம், கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் பரவி கரும்பூஞ்சனம் வளர்வதால், ஓலைகள் கறுப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இதை கட்டுப்படுத்தும் முறை குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதில், பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மண்ணுாரில், வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா பேசியதாவது:
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும். அதில், பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்த்து, உயிரியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டுப்பொறிகள் (நீளம் 5 அடி, 1.5 அடி அகலம்) ஏக்கருக்கு, எட்டு என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு அல்லது தண்டுபகுதியில் ஆறு அடி உயரத்தில் சுற்றி, விளக்கெண்ணையை பூச வேண்டும்.
விசைத் தெளிப்பானை கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம்.
சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பின் விளைவாக ஏற்படும் கரும்பூஞ்சனத்தை கட்டுப்படுத்த, ஒரு கிலோ மைதா மாவை, ஐந்து லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பின், 20 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.