தேசிய தரச்சான்று பெற்ற பவானி அரசு மருத்துவமனை
பவானி: பவானி அரசு தலைமை மருத்துவமனை அனைத்துப் பிரிவுகளிலும், மத்திய அரசால் நடத்தப்பட்ட ஆய்வில், 93 சத புள்ளிகள் பெற்று தேசிய தரச்சான்று பெற்றுள்ளது.
இம்மருத்துவமனையில், மத்திய அரசால் டில்லி, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள், கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். புற மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வகங்கள், எக்ஸ்ரே பிரிவு, மருந்தியல் பிரிவு, பிரசவ வார்டு, பிரசவத்துக்குப் பின்னர் கவனிப்பு வார்டு, அறுவை சிகிச்சை அரங்கு பராமரிப்பு, சமையல் அறை பராமரிப்பு, பிரேதப் பரிசோதனைக் கூடம், ரத்த சேமிப்பு வங்கி ஆகிய பிரிவுகளில் தரப் பரிசோதனையில், 93 புள்ளிகளைப் பெற்றது.
சென்னையில் நடந்த விழாவில், இம்மருத்துவமனைக்கான தரச்சான்றினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதை, டாக்டர்கள் வசந்தமஞ்சு, ஞானாம்பாள் பெற்றுக் கொண்டனர். இச்சான்று கிடைத்ததன் மூலம், 124 படுக்கைகள் கொண்ட பவானி அரசு மருத்துவமனைக்கு ஆண்டுக்கு, 12.40 லட்சம் ரூபாய் வீதம் அரசின் ஊக்கத் தொகையாக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தரச்சான்று பெறும் வகையில் சிறப்புடன் செயல்பட்ட மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தலைமை மருத்துவ அலுவலர் கோபால
கிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.