நிறுவன வரையறையில் புது பிரிவு 'நானோ'; தொழில்துறையினர் வலியுறுத்தல்
கோவை: குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறை, முதலீடு மற்றும் விற்றுமுதல் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1 கோடிக்கும் கீழ் முதலீடு கொண்ட நிறுவனங்களை 'நானோ' என புதிய வகைப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் 'உத்யம்' பதிவுகளின்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) 5.91 கோடி உள்ளன. இதில், 98 சதவீதம் மைக்ரோ எனப்படும் குறு நிறுவனங்கள். மொத்தம் 5.83 கோடி குறு நிறுவனங்கள் உள்ளன.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில், ஒரு கோடி ரூபாய் முதலீடு, ரூ.5 கோடி விற்றுமுதல் (டர்ன்ஓவர்) இருந்தால் அவை குறு நிறுவனங்கள்.
ரூ.10 கோடி முதலீடு, 50 கோடி விற்றுமுதல் இருப்பின் அவை சிறு நிறுவனங்கள். ரூ.50 முதலீடு, ரூ.250 கோடி விற்றுமுதல் இருப்பின், நடுத்தர நிறுவனங்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் தாக்கலான, மத்திய பட்ஜெட்டில் இந்த வரையறை மாற்றி அமைக்கப்பட்டு, முதலீடு 2.5 மடங்கும், விற்றுமுதல் 2 மடங்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இது, எம்.எஸ்.எம்.இ., துறையினரிடம், வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேசமயம், 'மைக்ரோ' நிறுவனங்களில் ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு கொண்ட நிறுவனங்கள், 95 சதவீதத்துக்கும் அதிகம்.
எனவே, ரூ.1 கோடிக்கும் கீழ் உள்ள நிறுவனங்களை, 'நானோ' என தனி வகைப்பாட்டில் கொண்டு வர, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) துணைத்தலைவர் சுருளிவேல் கூறியதாவது:
ரூ.50 லட்சத்துக்கும் கீழ் முதலீடு கொண்ட நிறுவனங்களே அதிகம். ரூ.12 லட்சம் இருந்தால் ஒரு லேத் அமைத்து விடலாம். ஓ.எம்.இ., எனப்படும் தனிநபர் தொழில்கள் மிக அதிகம்.
ரூ.25 லட்சம் முதலீடு கொண்ட மிகக்குறு நிறுவனம், ரூ.2.5 கோடி முதலீடு கொண்ட மைக்ரோ நிறுவனத்துடன் போட்டியிட முடியாது. எனவே, ரூ. 1 கோடிக்கு கீழ் முதலீடு கொண்ட நிறுவனங்களை, 'நானோ' என வகைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால் ஏறக்குறைய, 99 சதவீத நிறுவனங்கள் மைக்ரோ ஆகிவிடும். ஓ.எம்.இ., நிறுவனமும், ரூ.10 கோடி 'டர்ன்ஓவர்' செய்யும் நிறுவனமும் 'மைக்ரோ' என்ற ஒரே வரையறைக்குள் இருப்பது நியாயமல்ல. எனவே, ரூ. 1 கோடி முதலீட்டுக்கும் கீழ் உள்ள நிறுவனங்களைத் தனியாக வகைப்படுத்த வேண்டும்.அதிலும், உள் வகைப்பாடாக, ரூ. 25 லட்சம் முதலீடும், ரூ. 25 லட்சம் டர்ன் ஓவரும் உள்ள நிறுவனங்களை 'பிகோ' என்றும், ரூ. 50 லட்சம் முதலீடும், ரூ. 1 கோடி டர்ன் ஓவரும் கொண்ட நிறுவனங்களை, 'நானோ' என்றும் பிரிக்கலாம்.இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு, நடப்பு பார்லி., கூட்டத்தொடரிலேயே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக எம்.பி.,க்கள், மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.