சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடக்கும் பகுதிவாசிகள்

திருமழிசை, சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும், 1 லட்சத்திற்கும் அதிக மான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிப்பேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில், நெடுஞ்சாலையின் ஒருபுறம் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து மறுபுறம் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், மற்றும் 10க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் நடைமேம்பாலம் இல்லாததால் நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் கடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே, அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் கிராமப் பகுதியில் சாலையை கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement