நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த 1ம் தேதி ஆறு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். திருச்செந்துாருக்கு கிழக்கே, 30 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக, படகின் உள்ளே கடல் நீர் புகுந்தது.

விசைப்படகு மூழ்க துவங்கியதால், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் ஆறு பேரும், அந்த வழியாக சென்ற படகுகளை உதவிக்கு அழைத்தனர். துாத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் அவர்களுக்கு உதவி செய்து ஆறு பேரையும் மீட்டு, தங்கள் விசைப்படகில் ஏற்றிக் கொண்டனர்.

மேலும், அவர்களது மீன்பிடி வலைகள், உபகரணங்களையும் பத்திரமாக மீட்ட மீனவர்கள் தங்கள் படகில் ஏற்றி உதவி செய்தனர். கடலில் மூழ்கிய படகை கயிற்றில் கட்டி கரைக்கு பத்திரமாக இழுத்து வந்தனர்.

Advertisement