உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது ; டிரம்ப் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு
மாஸ்கோ: உக்ரைனை நேட்டோவில் சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை கடந்து நடந்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். மேலும், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது ரஷ்யாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கும் முன்னாள் அதிபர் பைடனின் முடிவை, தற்போதைய அதிபர் டிரம்ப் கைவிட்டு விட்டார். அதாவது, நேட்டோவில் உக்ரைன் இணைய அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் பைடன் அமெரிக்காவின் நிலையை மாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், 'உக்ரைன் விவகாரத்தில் முன்னாள் அதிபர் பைடனின் நிர்வாகம் எடுத்த முடிவுகள் குறித்து டிரம்ப் முதல் முறையாக பேசியுள்ளார். உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்ற ரஷ்யாவின் விருப்பத்திற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்' எனக் கூறினார்.