அகதிகளாக சென்றவர்களின் பாதுகாப்புக்காக புது சட்டம்: மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: பல்வேறு காரணங்களுக்காக அகதிகளாக வெளிநாடு சென்றவர்களின் பாதுகாப்புக்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 104 பேர், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டு விமானத்தில் ஏற்றி அழைத்து வரப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்ந்து செல்பவர் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக 'Overseas Mobility (Facilitation and Welfare) Bill, 2024' என்ற மசோதா, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் கொள்கைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.
இந்தியா அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பாக சசி தரூர் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது என்பது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும், அவர்களை நடத்திய விதம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் 1,100 இந்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தற்போது நடத்தப்பட்டதை போல் யாரும் நடத்தப்படவில்லை என்றார்.