சிதிலமடைந்த வனத்துறை கட்டடங்கள் இடித்து அகற்ற பகுதிவாசிகள் கோரிக்கை

மறைமலைநகர், மறைமலைநகர் ரயில்வே கேட் -- திருக்கச்சூர் செல்லும் சாலையோர வலதுபக்கம் காப்புக் காடுகள், சட்டமங்கலம் வரை உள்ளன.

அந்த காப்புக்காடுகளை பராமரிக்கும் வன அலுவலர்கள், காடுகளில் ரோந்து பணி மேற்கொண்ட பின் ஓய்வெடுக்க இரண்டு பழைய கட்டடங்கள் இருந்தன.

கடந்த 1962ல் கட்டப்பட்ட இந்த கட்டடங்கள், நாளடைவில் பயன்பாடு இல்லாமல் போனது. தற்போது இவை முழுதுமாக சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

கட்டடங்களில் இருந்த கதவு, ஜன்னல் உள்ளிட்டவை மாயமாகி, புதர் வளர்ந்துள்ளது.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:

இரவு நேரங்களில் இந்த பகுதியில் அமர்ந்து, சமூக விரோதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதுபோன்ற நேரங்களில் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த தடத்தில் பேருந்து சேவை இல்லாததால், பெரும்பாலானோர் இவ்வழியாக பணிக்கு நடந்து சென்று வருகின்றனர்.

இந்த கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

ஆபத்தை உணராமல் காதல் ஜோடிகளும் தனிமையில் பேச இந்த கட்டடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன.

எனவே, பொது மக்களை பாதிக்கும் வகையில் உள்ள இந்த இரு பழைய கட்டடங்களையும் இடித்து அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த கட்டடம் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வனப்பகுதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த கட்டடத்தை இடிக்க, பொதுப்பணித் துறையினருக்கு கடந்த ஆண்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வனப்பகுதியில் அத்துமீறி நுழைவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். மீறி நுழைபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை பலகையும் இந்த இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement