பஸ் கவிழ்ந்து கல்லுாரி மாணவர் இருவர் பலி

அவிநாசி:திருப்பூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பஸ் கவிழ்ந்ததில், படிக்கட்டில் பயணித்த கல்லுாரி மாணவர்கள் இருவர் இறந்தனர். மாணவ - மாணவியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, 'சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ்' என்ற தனியார் பஸ், நேற்று காலை, 7:55 மணிக்கு ஈரோடு புறப்பட்டது. பஸ்சில், 90க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். கூட்டமாக இருந்ததால், மாணவர்கள் உள்ளிட்ட பலர், பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தனர்.

காலை, 8:30 மணிக்கு செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம் அருகே சரக்கு லாரியை பஸ் முந்த முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது.

இதில், ஈரோடு, நந்தா கல்லுாரியில் பி.காம்., மாணவரான சுண்டக்காம்பாளையம் ஹரிகிருஷ்ணா, 19, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் தில்லைக்குட்டைப்பாளையம் பெரியசாமி, 19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், நான்கு மாணவர் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலியான மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா, 3 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


விபத்து நடந்தது ஏன்?




விபத்து நடந்த தனியார் பஸ் வழக்கமாக திருப்பூரில் இருந்து, 7:50க்கு புறப்படும். இந்த பஸ்சுக்கு முன் புறப்பட வேண்டிய தனியார் பஸ் பழுதானதால், அதில் ஏற வேண்டிய பயணியரும் இந்த பஸ்சில் பயணித்தனர். இதனால், 7:50க்குப் பதிலாக ஐந்து நிமிடம் தாமதமாக பஸ் புறப்பட்டது. விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில், பஸ்சை அதிவேகத்தில் டிரைவர் இயக்கியுள்ளார். பஸ்சில் பயணியரும் அதிகளவில் இருந்தனர். அதிவேகமும், அதிக பயணியர் இருந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement