காசாவுக்கு அமெரிக்க ராணுவம்? வெள்ளை மாளிகை விளக்கம்!

வாஷிங்டன் 'போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவை நாங்கள் எடுத்துக் கொள்வோம்; அங்கு சீரமைப்பு பணிகள் நடத்தப்படும்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதற்கு, பல தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என, அதிபரின் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் போரை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று, டொனால்டு டிரம்பை சந்தித்தார். நிருபர்கள் சந்திப்பின்போது, 'போரால் காசா பகுதி முழுமையாக சிதிலமடைந்துள்ளது. அந்த பகுதியை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும். அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வோம்' என, டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மற்ற முஸ்லிம்கள் நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலினே லியாவிட் நேற்று கூறியுள்ளதாவது:

காசாவின் புனரமைப்பில் அமெரிக்காவின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பம். அதற்காக அந்த பகுதியை முழுமையாக கைப்பற்றி, உரிமையாக்கி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வோம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

அதுபோல, அமெரிக்க ராணுவத்தை எந்தக் காரணம் கொண்டும் காசாவுக்கு அனுப்ப மாட்டோம்.

மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் தற்காலிகமாகவே மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும். புனரமைப்பு பணிகளுக்குப் பின் அவர்கள் நாடு திரும்பலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தானாக வெளியேறலாம்!

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:அமெரிக்க அதிபரின் யோசனையை நாங்கள் ஏற்கிறோம். காசா பகுதியில் சேதமடைந்த கட்டடங்களை இடித்து, அங்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவும் வகையில், அங்குள்ள பாலஸ்தீனர்கள், தாங்களாகவே தங்களுடைய சொந்த விருப்பத்தில் மற்ற நாடுகளுக்கு புலம் பெயரலாம்.இது தொடர்பான திட்டங்களை உருவாக்க இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். ஹமாஸ் மீதான போரை விமர்சித்த நாடுகளுக்கு, இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement