சிறுமிகளுக்கு தொந்தரவு 6 பேர் சிறையிலடைப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848794.jpg?width=1000&height=625)
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மாணவிகளான 8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதான 7 பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மானாமதுரை அருகேவுள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, ஆபாசமாக பேசுதல், நல்ல மற்றும் கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த விழிப்புணர்வு மூலம் மாணவிகள் 8 பேர் பள்ளிக்கு செல்லும் போதும் வீட்டுக்கு வரும் போதும் சிலர் இதே போன்ற கெட்ட தொடுதல் செய்வதாக குழந்தைகள் நலக்குழுவிடம் கூறினர்.
குழந்தைகள் நலக்குழுவினர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். போலீசார் கிராமத்திற்கு சென்று மாணவிகளின் பெற்றோர்களிடம் புகார் பெற்று ராமு 46, மணி 50, சசிவர்ணம் 38, லட்சுமணன் 46, முனியன் 66, மூக்கன் 72, பழனி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் தாக்கியதில் ராமு காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மற்ற 6 பேரையும் போலீசார் நேற்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி சிறையில் அடைத்தனர்.