போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா?
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் போக்குவரத்து போலீசார் கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வரமால் காட்சிப்பொருளாகவே உள்ளது.
இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி , வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
எனவே போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சிக்னலை இயங்க துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் ,வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.