வயதான தம்பதி மீது தாக்குதல் பெண் உட்பட 3 பேர் மீது வழக்கு
திருக்கனுார் : முன்விரோதம் காரணமாக வயதான தம்பதியை தாக்கிய, பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருக்கனுார் அடுத்த கொடாத்துார் மணவெளி முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 75; விவசாயி. இவருக்கு லட்சுமி, 62; என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
கிருஷ்ணசாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஞானவேல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஞானவேல் மனைவி சிவசங்கரி, தனது வீட்டின் வாசலில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணசாமி வீட்டு மரத்தின் இலைகள் அங்கு விழுந்துள்ளது.
இதனை பார்த்த சிவசங்கரி, அங்கிருந்த லட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கோபமடைந்த சிவசங்கரி, அவரது மகளுடன் இணைந்து, இரும்பு ராடால் லட்சுமியை தலையில் தாக்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அங்குவந்த கிருஷ்ணசாமியை, அங்கிருந்த ஞானவேல் கத்தியால் முகத்தில் கிழித்துள்ளார்.
காயமடைந்த கிருஷ்ணசாமி, லட்சுமி ஆகியோரை மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார், ஞானவேல், அவரது மனைவி சிவசங்கரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.