கணக்கெடுப்போடு நிற்குது பாதாள சாக்கடை பணி
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் சாக்கடை நீர் மழை நீர் ரோட்டில் ஓடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலையில் பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்ட பணியாக கணக்கெடுப்பு மட்டுமே நடந்துள்ளது. விரைவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு கண்ட நிலையில் 2021 ல் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. மாநகராட்சி ஆன பின்னர் பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசும், அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர். சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதோடு ஆக்கிரமிப்பினாலும் தெருக்கல், ரோடுகள் சுருங்கிவிட்டன.
மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் பல்வேறு ஓடைகள் இருந்தாலும் பெரும்பான்மையானவை துார்வாரப்படவில்லை. அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டு இருந்தாலும் குடியிருப்புகள், தொழிற்சாலைகளின் கழிவுகளை தாங்கும் அளவிற்கு இல்லை. மழைக் காலங்களில் சாக்கடை நீரோடு மழை நீரும் தெருவில், ரோட்டில் ஓடி மக்களை சிரமப்படுத்துகிறது.
இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அடுத்தடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டு வாங்குவதற்காக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என கூறியே வெற்றி பெற்றனர். ஆனால் இதற்காக எந்த பணியும் துவங்காத நிலையில் மீண்டும் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.
இதற்காக மாநகராட்சியில் அளவீடு செய்யும் பணி துவங்கியது. சிவகாசி திருத்தங்கல் இரண்டும் சேர்த்து 179 கிலோமீட்டர் துாரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆனையூர், விஸ்வநத்தம், நாரணாபுரம், அனுப்பன்குளம், செங்கமல நாச்சியாபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் தற்போது மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதாள சாக்கடை திட்டத்தின் படி 360 கிலோமீட்டர் துாரம் அமைக்கப்பட வேண்டி இருக்கும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் உடனடியாக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசு கூறி உள்ள நிலையில் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
-
லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை