மூங்கில் குழலில் மெல்லிசை கீதங்கள்: நாடு தாண்டி சாதிக்கும் 'புளூட்' இசை கலைஞர் பிரியதர்ஷினி

இசைக் கருவிகளில், மூங்கிலில் உருவான புல்லாங்குழலில் (புளூட்) இருந்து வெளியாகும் மெல்லிசைக்கு தனி சுகம் உண்டு. கண்மூடி புல்லாங்குழல் ஓசையை ரசிக்கும் போது ரம்மியமான ரீங்காரம் தவிர மனதிற்குள் எந்த ஒலியும் வந்து செல்லாது. இந்த இசைக்கு என்றே தீவிர ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் உண்டு. இசை உலகில் 'புளூட்' இசை கலையில் பெண்கள் ஆளுமை அரிதாகி வரும் சூழலில், சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினி, புளூட் இசைக் கலையில் தமிழக முகமாக மாறி வருகிறார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்மிடம்...

மனிதவள துறையில் முதுகலை பட்டம் முடித்து ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். என் மாமா ஆதிக்குடி நாராயணன் சீனிவாசன், பெரியம்மா பாக்கியலட்சுமி பிரபல புளூட் இசை கலைஞர்கள். சிறு வயது முதல் பெரியம்மாவிடம் புளூட் கற்றேன். அவர் தான் என் குரு. மாமாவின் திறமை அபாரமானது.

கல்லுாரி படிக்கும் போது சென்னை பேத்தாச்சி ஆடிட்டோரியத்தில் முதல்முறையாக மேடை ஏறினேன். 2014ல் சென்னை கிருஷ்ணகான சபாவில் எனது முதல் கச்சேரி அரங்கேற்றம் நடந்தது. 2016ல் திருமணத்திற்கு பின் ஜப்பான் சென்று, தனியாக புளூட் கச்சேரிகள் நடத்தினேன்.


ஜப்பானியர்கள் இசையில் ஆர்வம் கொண்டவர்கள். அந்நாட்டு கலைஞர்களுடன் சேர்ந்தும் பல புளூட் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். ஜப்பானில் 8 ஆண்டுகளாக சாப்ட்வேர் கம்பெனி பணிக்கு இடையே என் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கிடையே ஐ.டி., நிறுவனங்களுக்கு 'சாப்ட் ஸ்கில்ஸ்' பயிற்சி ஆலோசகர், ஆங்கிலம்- ஜப்பான் மொழி பெயர்ப்பாளராகவும் உள்ளேன். சென்னைக்கு 2024ல் திரும்பி தற்போது 'யு டியூப்' சேனல் நடத்துகிறேன். எனக்கு 2 லட்சம் 'வியூவர்ஸ்', 3 ஆயிரம் 'சப்ஸ்கிரைபர்ஸ்' உள்ளனர்.
Latest Tamil News

என் குருவான பெரியம்மா பாக்கிய லட்சுமியை கவுரவப்படுத்தும் வகையில் அவரது பெயரில், ஆன்லைன் மியூசிக் பள்ளி நடத்துகிறேன். இதுவரை 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புளூட் கற்றுக்கொடுத்துள்ளேன். பல மேடைகளில் என் மாணவர்கள் கலக்கி வருகின்றனர். எங்கள் குடும்ப சொத்தே புளூட் இசை தான். எங்களின் அடுத்த ஜெனரேஷனில், என் அக்காவின் மகன்கள் இருவர் தற்போது கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.
கர்நாடகா சங்கீத கச்சேரி, பரதநாட்டியம், டான்ஸ் அரங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஸ்பெஷலாக 'புளூட்' இசைக்கிறேன். புளூட் இசையில் 100க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை இசைத்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். இசைக் கலைஞர்களுக்கு முதல் மேடை கிடைப்பது சவாலாக இருக்கும். வாய்ப்பை பயன்படுத்தி திறமைகளை வெளிப்படுத்துபவர்களே இசை உலகில் சாதிக்கின்றனர்.

பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அந்த சாதனையின் எல்லைக்கோட்டை நான் தொட்டுள்ளதாக தற்போது உணர்கிறேன். உலக அளவில் புளூட் இசையை தனித்துவமாக கொண்டு செல்வதே என் லட்சியம் என்கிறார் பிரியதர்ஷினி.

Advertisement