போதையில் பஸ் கடத்தல் இ.சி.ஆரில் நள்ளிரவில் சலசலப்பு

திருவான்மியூர், திருவான்மியூரில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, முன்னால் சென்ற சிமென்ட் கலவை லாரி மீது, பிராட்வே -- கோவளம் 'தடம் எண்: 109' பேருந்து அதிவேகமாக மோதியது. இதில், மாநகர பேருந்தின் 'நம்பர் பிளேட்' மட்டும் சேதமடைந்தது.

ஆனால், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டியுள்ளார். பேருந்தில் வேறு எவரும் இல்லாததால் சந்தேகமடைந்த லாரி ஓட்டுநர்கள், ரோந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீசார், அவர்கள் சொன்ன தகவலை வைத்து அவ்வழியே விரைந்தனர்.

திருவான்மியூரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில், அக்கரை சந்திப்பில் சாலையோரம் பேருந்து நின்றது. போலீசார் பேருந்தில் ஏறி பார்த்தபோது, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர், 'ஸ்டியரிங்'கில் தலை சாய்த்து துாங்கிக் கொண்டிருந்தார்.

போலீசார் அவரை தட்டி எழுப்பி விசாரித்தபோது, மதுபோதையில் பேருந்தை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனால், நள்ளிரவு வேளையில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் விசாரணையில் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 33, என்பதும், போரூரில் உள்ள கார் ஷோரூமில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

மேலும், நேற்று முன்தினம் நள்ளிரவு, அதீத மதுபோதையில் இருந்தவர், திருவான்மியூர் பேருந்து நிலைய பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை இயக்கி, இ.சி.ஆர்., நோக்கி ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, பணிமனை ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு, பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவான்மியூர் பணிமனை போர்மேன் சையது கியாசின் புகாரின்படி, ஆபிரகாமை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement