மாதம்புதுாரில் மது விற்பனை 'ஜோர்'; கண்காணிக்காமல் போலீசார் 'கொர்ர்...'

பல்லடம் ; குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்கள் மற்றும் வள்ளலார் நினைவு தினம், மிலாது நபி ஆகிய தினங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில், மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், சில மதுக்கடைகள் விதிமுறை மீறி செயல்படுகின்றன. மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி செயல்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என, முன்கூட்டியே எச்சரிக்கப்படுவதுடன், போலீசாரும் இவற்றை கண்காணிக்கின்றனர்.

இருப்பினும், கார்கள், டூவீலர்கள் மற்றும் கடைகள், வீடுகளில் மறைத்து வைத்தும், சிலர், முறைகேடான மது விற்பனையில் ஈடுபடுகின்றனர். மேலும், குடிமகன்களின் ஆவலை உணர்ந்து, இந்நாட்களில் இரு மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர்.

இவ்வகையில், 11ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், மாதம்புதுார் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள பயன்பாடற்ற அரசு கட்டடத்தில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து, விற்பனை ஜோராக நடந்து வந்தது.

மதுக்கடைகளில், விதிமுறை மீறிய விற்பனை செய்தால், நடவடிக்கை பாயும் என்பதால், தற்போது, இது போன்ற நூதன முறைகளை பின்பற்றி விற்பனையில் ஈடுபடுவதுடன், கூடுதல் லாபம் பார்க்கின்றனர். போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement