மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை, மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., நீளத்தில், 128 ரயில் நிலையங்களுடன் நடந்து வருகிறது.

இதில் மூன்றாவது வழித்தடத்தில், 26.7 கி.மீ., நீளத்தில், மாதவரம்- கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் - தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் - தரமணி சுரங்க வழித்தடத்தில், கிரீன்வேஸ் மெட்ரோ ரயில் நிலையம், அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் ஆகியவை அமைகின்றன.

இப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியில், அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், 2023 ஜூன் மாதம் ஈடுபடுத்தப்பட்டது.

பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமாக பாறைகள், அதிக நீரோட்ட பகுதிகள் மற்றும்நகர பகுதிகளுக்கான இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக கடந்து, அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் அருகில், இந்த இயந்திரம் வெளியே வந்துள்ளது.

அடையாறு ஆற்றின் கீழ், 40 ----- - 50 அடி ஆழத்தில், 300 மீட்டர் நீளத்திற்கு, ஆற்றின் கீழ் செல்லும் வழித்தட பகுதி உட்பட, 1.21 கி.மீ., துாரத்தை இந்த இயந்திரம் கடந்துள்ளது.

இதேபோல, 2024 செம்டம்பரில், காவிரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணிகளை துவங்கியது. இது 'டவுண் லைன்' சுரங்கம் தோண்டும் பணியை முடித்துள்ளது.

இந்த இயந்திரம், அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது.

இந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அப்போது, நகராட்சிநிர்வாகத் துறை அமைச்சர் நேரு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் சித்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



நடப்பாண்டு இறுதிக்குள் துவக்கப்படும்

முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவு:கருணாநிதி முதல்வராகவும், நான் துணை முதல்வராகவும் இருந்தபோது துவங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள், இந்த ஆட்சியில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்கு பின், இரண்டாம் கட்ட பணிகளை, மாநில அரசின் நிதியிலேயே தொடர்ந்தோம். சமீபத்தில், நம் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் பங்களிப்போடு, இன்னும் விரைவாக பணிகளை செயல்படுத்தி வருகிறோம். நடப்பாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்கி வைக்கப்படும்.மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளேன். பணிகள் முழுமையாக நிறைவேறும்போது, நாட்டிலேயே நகர பொது போக்குவரத்து இணைப்பில், சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும். நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தபோது, நாம் துவங்கிய திட்டம் செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில், கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒப்புதலை விரைந்து வழங்க, மத்திய அரசை கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement