திருப்பதி சுவாமி தரிசனம்: முன்பதிவு தேதி அறிவிப்பு

சென்னை : திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. மே மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு, நாளை காலை, 10:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, வரும், 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, 21ம் தேதி மாலை, 3:00 மணிக்கு துவங்கும்.
அங்கப்பிரதட்சணம் முன்பதிவிற்கு வரும், 22ம் தேதி காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.
மே மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு வரும், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை, தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு துவங்குகிறது.