சிவகங்கையில் துவங்கியது கோடை வெயில் கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் இல்லை  புலம்பி தவிக்கும் பொதுமக்கள் 

சிவகங்கை : கொளுத்தும் கோடை வெயிலில் குடிக்க தண்ணீர் கூட இல்லையே என சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்யும் அலுவலகமாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. மாவட்ட அளவில் நகரம், கிராமங்களில் அடிப்படை வசதி இல்லை என்றால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு மூலம் புகார் அளிக்கலாம். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மனு அளிக்க வரும் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.

குறிப்பாக அவசரத்துக்கு ஒதுங்க கூட போதிய கழிப்பறை இல்லை. இருக்கும் ஒரே ஒரு கழிப்பறையை முறையாக சுத்தம் செய்வதில்லை. அங்கு தடையின்றி தண்ணீர் வசதியும் செய்து தரவில்லை.

நகராட்சி சார்பில் கலெக்டர், வளர்ச்சி பிரிவு, வனத்துறை, மாவட்ட கருவூலம், கல்வித்துறை அலுவலகங்களுக்கு முன் தரைமட்ட தொட்டி கட்டி வைத்துள்ளனர். ஆனால், அதில் ஒரு நாள் கூட பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் நிரப்பி வைக்கவில்லை. இதனால் மக்கள் குடிக்க தண்ணீரின்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடைகளை நோக்கி செல்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடைக்காரர்கள், மினரல் வாட்டர் எனக்கூறி ரூ.10 முதல் 20 வரை விற்று விடுகின்றனர். கலெக்டர் அலுவலக வளாக முதல், இரண்டாம் தளத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தியுள்ளனர். ஆனால், அந்த சுத்திகரிப்பு இயந்திரம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வழங்க தண்ணீர் தான் இல்லை. இங்கு மனு அளிக்க வரும் மக்கள் சொல்லொன்னா துயரத்தை தான் சந்தித்து செல்கின்றனர்.

Advertisement