கோவை சிறுமி கூட்டு பலாத்காரம்: கல்லுாரி மாணவர்கள் 7 பேர் கைது; சமூக வலைதள பழக்கத்தால் நேர்ந்த கொடூரம் 

கோவை; கோவையில், 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஏழு கல்லுாரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுமி சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் தாத்தா, சில வாரங்களுக்கு முன் இறந்தார். இதனால் சிறுமி இரவு நேரங்களில் தன் பாட்டிக்கு துணையாக, அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று உறங்குவது வழக்கம். கடந்த, 16ம் தேதி இரவு, சிறுமி, அவரது பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வராததால், பாட்டி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார்.

பதறிப்போன சிறுமியின் தந்தை, மகளை காணவில்லை என, போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடினர். அப்போது, சிறுமி, அவரது பாட்டி வீட்டின் அருகில் இருந்துள்ளார். சிறுமியை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

இதில், சமூக வலைதளம் வாயிலாக பழக்கமான இரண்டு கல்லுாரி மாணவர்கள், சிறுமியை கோவைப்புதுாரில் உள்ள தங்கள் அறைக்கு அழைத்து சென்றதும், அங்கு, இரண்டு மாணவர்கள், அவர்களுடன் அறையில் தங்கியிருந்த மேலும் ஐந்து மாணவர்கள் என, ஏழு பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

அதன் பின், இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, பாட்டி வீட்டின் அருகில் சிறுமியை விட்டு சென்றுள்ளனர். சிறுமியிடம் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், ஏழு மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், கோவைப்புதுார் தனியார் கல்லுாரிகளில் படிக்கும் ஜெபின், 20, ரக் ஷித், 19, அபினேஸ்வரன், 20, தீபக், 20, யாதவ ராஜ், 19, முத்து நாக ராஜ், 19, நிதிஷ், 20, என்பது தெரியவந்தது. போலீசார் ஏழு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement