நுாறு நாள் வேலை: தொழிலாளருக்கு 4 மாதமாக சம்பளம் வரவில்லை

திருப்பூர்: நுாறு நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு, கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

கிராம ஊராட்சிகளில் சாலை அமைத்தல், மரக்கன்று நடுதல், குளம் துார் வாருதல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள், தேசிய நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும், நுாற்றுக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.வாரந்தோறும், இவர்களது வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். கடந்த இரு ஆண்டாக சம்பளம் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது கடந்த 4 மாதமாக சம்பளம் வரவில்லை.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கூறுகையில், ''நுாறு நாள் வேலை திட்டத்துக்கு, மத்திய அரசு, 1,600 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்க வேண்டியுள்ளது; இதில், கடந்த, பத்து நாட்கள் முன், 500 கோடி ரூபாய் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Advertisement