பாரம்பரிய கலைத் திருவிழா

கோவில்பாளையம்; வெள்ளானைப்பட்டியில், பாரம்பரிய கலைத் திருவிழாவில், சிறுவர், சிறுமியர் விளையாடி அசத்தினர்.

பாரம்பரியமான விளையாட்டுகளை சிறுவர், சிறுமியர் மறந்து விட்டனர். அவர்களுக்கு அதை நினைவுபடுத்தும் வகையில், வெள்ளானைப்பட்டி கலை விரும்பிகள் சார்பாக, பாரம்பரிய கலைத் திருவிழா, புத்தக வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா வெள்ளானைப் பட்டியில் நடந்தது. கவிஞர் பரமசிவன் தலைமை வகித்தார்.

இதில் பாரம்பரிய விளையாட்டுகளான, சடுகுடுப்பான், திரிவீசுதல், கண்ணாமூச்சி, நான்கு கர நொண்டி, கல் பீச்சான், கோலி குண்டு, காசிக்குழி, பம்பரம், பில்லி, சூரைப்பந்து, குலை குலையாய் முந்திரிக்காய், கும்மியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நான்கு பிரிவுகளாக நடந்தன.

இதில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று அசத்தினர். இதையடுத்து புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.

ஊர் பிரமுகர்கள் பாலசுப்ரமணியம், சந்தோஷ், சரஸ்வதி, தேவராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கசாமி, கோவில் தர்மகர்த்தா பொன்னுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னோடி விவசாயிகள், மரம் வளர்ப்பில் ஈடுபட்டோர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement