செட்டிபுண்ணியம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள்கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி -- செட்டிபுண்ணியம் சாலை 4 கி.மீ., துாரம் கொண்டது.

இந்த சாலையை வடகால், செட்டிபுண்ணியம், வெங்கடாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர, தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என, இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்று வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்தும், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வழியே சென்று வருகின்றன.

இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ள பகுதிகளில் அதிக அளவில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.

சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முயலும் போது, வனத்துறையினர் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர காலங்களில் கூட, விரைவாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement