என்னை பாலியல் குற்றவாளி என்பதா; மார்க்சிஸ்ட் கம்யூ., சண்முகத்திற்கு சீமான் கண்டிப்பு
மதுரை : ''பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில், மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி எனக்கூறுகிறார்,'' என, மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: என் மீது ஆதாரமில்லாத அவதுாறான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 15 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் வழக்கை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தேன். வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வழக்கில் உடன்பாடு செய்ய வாய்ப்புமில்லை, தேவையுமில்லை.
திருமணம் செய்யக்கூடாது என்பது ஈ.வெ.ரா., கோட்பாடு. 'என்ஜாய்மென்ட் வித் அவுட் ரெஸ்பான்ஸிலிட்டி' என அவர் கூறினார். ஆனால் எனக்கு எதிராக ஈ.வெ.ரா., பக்தர்கள் பேசுகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளன. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு அக்கட்சி குரல் கொடுக்கவில்லை. பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத போது மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போராட அனுமதிக்காத அரசும் இதில் குற்றவாளியாக தானே உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி ஜீவானந்தத்துடன் செத்துப்போய்விட்டது. சங்கரய்யாவுடன் முடிந்து போய் விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் வாழும் புனிததலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். அவருக்கு ஏன் நுாற்றாண்டு விழா தமிழக அரசு கொண்டாடவில்லை.
பல தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக செயல்பட்ட நிலையில் தற்போது 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கட்சி குறுகி நிற்கிறது. அக்கட்சியின் புரட்சி, போராட்டங்களை எல்லாம் வறட்சியாக்கிவிட்டது. எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுப்படுத்த வேண்டுமென செயல்படுகின்றனர்.
நடிகை விஜயலட்சுமி என்னை மட்டுமல்லாமல் எனது தாய், மனைவி குறித்து பேசுகிறார். இவ்வழக்கில் 15 ஆண்டுகளாக அமைதி காத்தேன். இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றத்தை நாடி உள்ளேன். தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார். அப்படி என்றால் தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது தானே. இவ்வாறு கூறினார்.