சாம்பியன்ஸ் டிராபி : ஆஸி.,யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி

3

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


@1brபாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.


இன்று (மார்ச் 04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கூப்பர் கோன்னலே ரன் எடுக்காமல் அவுட்டானார். பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.


டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்து இருந்த போது வருண் பந்தில் அவுட்டானார். பிறகு ஸ்மித்தும், லபுஸ்சங்கேவும் ரன்களை சேர்க்க துவங்கினர். ஆனால், லபுஸ்சங்கே 29, இங்கிலீஸ் 11 ரன்களில் அவுட்டானார்கள். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மித்தும் 73 ரன்களுக்கு அவுட்டானார். மேக்ஸ்வெல் 7 , பென் துவார்சுஹூயுஸ் 19, ரன்களில் அவுட்டானார். அலெக்ஸ் கரே 61 ரன்களில் ரன் அவுட் ஆனார்.


இறுதியில் ஆஸி., அணி 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் முகமது ஷமி 3, வருண், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

வெற்றி



இதன் பிறகு 265 வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 28 ரன்னில் அவுட்டானார்.


தொடர்ந்து கோஹ்லியும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து மெதுவாக ரன்களை சேர்த்தனர். ஸ்ரேயாஸ் 45 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் 27 ரன்களில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 84 ரன்களில் அவுட்டானார். அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 28 ரன்னில் அவுட்டானார்.

48.1 ஓவரில் கே.எல்.ராகுல் சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 267 ரன்கள் எடுத்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்களுடனும் , ஜடேஜா 2 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.


வரும் 9 ம் தேதி நடக்கும் பைனலுக்கு முதல் அணியாக இந்திய அணி தகுதி பெற்றது.

ரசிகர்கள் உற்சாகம்



2023ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி ஆஸி.,யிடம் வீழ்ந்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸி., அணியை இந்தியா பழிவாங்கிவிட்டதாக கூறி ரசிகர்கள் கூறியுள்ளனர். பட்டாசு வெடித்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

யாருடன் மோதல்



நாளை லாகூரில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 9 ம் தேதி துபாயில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்

Advertisement