பொன்மாணிக்கவேலுக்கு விசாரணை அறிக்கை தர இயலாது: ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்

மதுரை; சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ., பதிந்த வழக்கில், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்த வழக்கில், 'அறிக்கை கோர அவருக்கு உரிமை இல்லை' என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ., தெரிவித்தது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார். சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளி தீனதயாளனை கைது செய்தார்.
ஆரம்பகட்ட விசாரணை
அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ் மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.
காதர் பாஷா, 'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
சி.பி.ஐ., விசாரிக்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டது. டில்லி சி.பி.ஐ., போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவருக்கு 2024 ஆக., 30ல் உயர்நீதிமன்ற கிளை முன்ஜாமின் அனுமதித்தது.
அவர், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அதை அந்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. எதிர்த்து, பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.
நிபந்தனை
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
சி.பி.ஐ., தரப்பு, 'குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின் மனுதாரருக்கு அறிக்கை வழங்கப்படும். விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் அறிக்கை கோர அவருக்கு உரிமை இல்லை. சாட்சிகளை கலைக்க மனுதாரர் முயற்சிக்கிறார். அவர் முன்ஜாமின் நிபந்தனைகளை மீறுகிறார்.
வழக்கு பற்றி தேவையின்றி பேட்டி அளிக்கிறார். அவரது முன்ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, தெரிவித்தது.
மேலும், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. நீதிபதி வழக்கை மார்ச் 17க்கு ஒத்திவைத்தார்.
மேலும்
-
சாடிவயலில் புதிய யானைகள் முகாம் விரைவில் திறக்கப்படும்: சுப்ரியா சாஹூ
-
முதல்வரின் தனிப்பிரிவுக்கு 4 முறை மனு அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகி மீண்டும் மனு
-
தொழில்நுட்ப போட்டியில் அசத்திய பண்ணாரி அம்மன்
-
மாவட்ட மைய நுாலகத்தில் புதிய வசதிகள் 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பு
-
ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டுகோள்
-
'ஒலிம்பியாடு' கோப்பை போட்டி கற்பகம் பல்கலை சாம்பியன்