உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்ரல் 4ல் கும்பாபிேஷகம்

உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்., 4 ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.

ராமநாதபுரத்திலிருந்து 18 கி.மீ.,ல் உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சிவன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்றது. புராணம் மற்றும் இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்புள்ள இக்கோயில் ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது.

2010 ல் ராஜகோபுரம் மற்றும் அம்மன் கோபுரங்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மங்களநாதர் சுவாமி மற்றும் மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்.,4 வெள்ளி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

இதையொட்டி 7 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. மங்கள நாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன், மரகத நடராஜர், திருக்கல்யாண மண்டபம், அர்த்தமண்டபம், பிரகார மண்டபம், மேற்கு கோபுர வாசல், சகஸ்ரலிங்கம், அக்னி தீர்த்த தெப்பக்குளம், பரிவார சன்னதிகள் அமைந்துள்ள பகுதிகளில் புதிய வர்ணங்கள் பூசப்பட்டு பொலிவுடன் காட்சி தருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் உள்ள கோபுர விமான கலசத்தில் 2010ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்போதைய கலசத்தில் நிரப்பப்பட்ட வரகு நேற்று திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், பொறியாளர்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் உடன் இருந்தனர்.

வரகு தானியம் புதுப்பொலிவுடன் இருந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மங்களநாதர் சன்னதி முன்புறமுள்ள ராஜ கோபுரம் 120 அடி உயரமும், அம்மன் சன்னதி முன்புறம் உள்ள கோபுரம் 90 அடி உயரமும் கொண்டதாகும். விரைவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுர கலசங்களிலும் புதிய வரகு நிரப்பப்பட உள்ளது.

Advertisement