ரோட்டில் தேங்கும் கழிவுநீர் போக்குவரத்துக்கு கடும் அவதி

திருப்பூர்:பாரப்பாளையம் அருகே, ரோட்டில் தோண்டிய குழியில்கழிவு நீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, மங்கலம் ரோட்டில், பாரப்பாளையம் பிரிவிலிருந்து செல்லம் நகர் வழியாக முருகம்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலைக்குச் சொந்தமான ரோடு உள்ளது.

நுாற்றுக்கணக்கான வீடுகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள முக்கியமான பகுதியாக உள்ளதால், இந்த ரோட்டில், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த ரோடு 38 மற்றும் 42 ஆகிய இரு வார்டுகளை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. ஆண்டிபாளையம் ரோடு பிரிந்து செல்லும் இடத்தில், ரோட்டின் குறுக்கில், சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. தற்போது பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குழி தோண்டப்பட்டது.

இப்பணியின் போது, குழாயில் உடைப்பு ஏற்பட்டது. பல நாட்களாகியும் உடைப்பு சரி செய்யாமல் உள்ளதால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறத் துவங்கியது.

இந்த கழிவுநீர் குழாய் பதிப்புக்கு குழி தோண்டிய இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

குழாய் உடைப்பை விரைவில் சரி செய்து, ரோட்டை சீரமைக்க வேண்டும். இல்லாவிடில், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்தக்குழியால் ஆபத்து உள்ளது.

Advertisement