எச்சரிக்கை பட்டன் விலை நிர்ணயம்

பெங்களூரு: பொது வாகனங்களில் ஜி.பி.எஸ்., - அபாய எச்சரிக்கை பட்டன்களுக்கு மாநில போக்குவரத்துத் துறை விலை நிர்ணயம் செய்துள்ளது.

புதுடில்லி நிர்பயா சம்பவத்தை அடுத்து, பொது வாகனங்களில் வி.எல்.டி., எனும் வெஹிகில் லோகேஷன் டிராக்கிங் கருவி, அபாய எச்சரிக்கை பட்டன்கள் பொருத்த வேண்டும் என்பதை, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை கட்டாயமாக்கியது.

பொது சேவை வாகனங்களான பஸ், மேக்சி கேப், பள்ளி பஸ்களில் இவை கட்டாயமாக்கப்பட்டன. ஆனால் வாகன உரிமையாளர்களோ, இந்த கருவிகளின் விலை அதிகமாக இருப்பதால், இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 4,000 ரூபாய் மதிப்புகள் இக்கருவிகளை, 18,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டினர்.

இதையடுத்த கர்நாடகா போக்குவரத்துத் துறை, இதற்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, வரி இல்லாமல், வி.எல்.டி., கருவியை 5,424 ரூபாய்க்கும்; அபாய எச்சரிக்கை பட்டன் கருவி 325 ரூபாய்க்கும்; நெட்ஒர்க் இணைப்பு மற்றும் பராமரிப்புக்கு, 1,800 ரூபாய் என நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

ஐந்த நபர்கள் அமர்ந்து செல்லும் காராக இருந்தால் 3 அபாய எச்சரிக்கை பட்டன்களும்; 21 இருக்கை கொண்ட பஸ்சாக இருந்தால், ஏழு அபாய எச்சரிக்கை பட்டங்களும் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவிகளை பொருத்தவில்லை என்றால், 'வாகன தகுதி சான்றிதழ்' கொடுக்கப்படாது, என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Advertisement