முதல்வர் மீதான 'முடா' வழக்கு சிநேகமயி கிருஷ்ணா மேல்முறையீடு

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீதான 'முடா' வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க மறுத்த, நீதிபதி நாகபிரசன்னாவின் தீர்ப்பை எதிர்த்து, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா மேல்முறையீடு செய்துள்ளார்.

'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக முதல்வர் சித்தராமையா மீது, லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்தது. விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா போலீசார், இந்த வழக்கில் முதல்வர், அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று, நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, 'லோக் ஆயுக்தா விசாரணையில் நம்பிக்கை இல்லை. முதல்வர் மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்' என, உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, 'லோக் ஆயுக்தா விசாரணை நடக்கும்போது, சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சிநேகமயி கிருஷ்ணா நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.

Advertisement