உங்களால் தலித்தை முதல்வராக்க முடியுமா?

பீதர்: ''உங்களுக்கு வயதாகி விட்டது; உங்கள் தலைவர் பதவி காலம் முடிவதற்குள், தலித்தை முதல்வராக்குங்கள்,'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பா.ஜ., முன்னாள் அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் சவால் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பான பிரச்னை அதிகரித்து வரும் வேளையில், தலித் முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

காங்கிரசில் உள்ள தலித் தலைவர்கள், தனித்தனியாக தங்கள் பலத்தை நிரூபிக்க முன்வந்துள்ளனர். கட்சியின் தலித் தலைவர்கள், தங்கள் சமூகத்தின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை சமீபத்தில் சந்தித்து பேசினர்.

ஆனால் முதல்வர் மாற்றம் பற்றி பேசுவதை தடுக்க, கட்சி மேலிடம் அனைவரின் வாயையும் அடைத்துள்ளது.

இதற்கிடையில், பீதரில் நேற்று கோவிந்த் கார்ஜோள் அளித்த பேட்டி:

காங்கிரசின் தலைவரான உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் பதவி காலம் முடிவதற்குள் தலித்தை மாநில முதல்வராக்குங்கள். மூழ்கும் கப்பலான காங்கிரசின் தலைவராக கார்கேவை தலைவராக்கி உள்ளனர்.

உங்கள் தேர்தல் அறிக்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதி அளித்திருந்தீர்கள். ஆனால், இங்குள்ளவர்கள், தலித்கள் வளர விரும்புவதில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால், மாநில முதல்வராக தலித்தை நியமித்து காட்டுங்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகவில்லை. ஒரு மேம்பாட்டு பணிகள் கூட நடக்கவில்லை. மாநில அரசு, நிதி ரீதியாக திவாலாகி உள்ளது.

இதுவரை 35,000 கோடி ரூபாய் வீணாகி உள்ளது. தலித்களை சித்தராமையா அரசு ஏமாற்றுகிறது.

இது தான் சமூக நீதியா. இது நீதி அல்ல; அநீதி.

நீங்கள், 7 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தயாரித்து உள்ளீர்கள். எங்கள் மாவட்டத்துக்கு 60,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

தலித் அமைச்சர்களுக்கு மரியாதையோ, கவுரவமோ இல்லை. அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement