கொப்பால் இரும்பு தொழிற்சாலை பணிகளை நிறுத்த முதல்வர் உத்தரவு

கொப்பால்: கொப்பால் இரும்பு தொழிற்சாலைப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, கலெக்டர் நளின் அதுலுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கொப்பால் ஹலவர்த்தியில் உள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளியாகும் கழிவுகள், துாசிகளால் ஹலவர்த்தி, அல்லாநகர், சிக்கபனகல், ஹிரேபனகல், கசனகண்டி கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொழிற்பேட்டைக்குள் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 13 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட இரும்பு தொழிற்சாலையை, பால்டோட்டா என்ற நிறுவனம் கட்டி வந்தது.

இந்த தொழிற்சாலை அமைந்தால், உடல் ஆரோக்யம் பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களும் சேதம் அடையுமென, மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தொழிற்சாலை பணிகளை உடனடியாக நிறுத்த கோரி, கடந்த மாதம் 24ம் தேதி கொப்பாலில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மடாதிபதி அபிநவ கவிசித்தேஸ்வர சுவாமி தலைமையில் நடந்த பேரணிக்கு, 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு கொடுத்தன. தொழிற்சாலை விஷயத்தில் கட்சி பேதங்களை மறந்து அரசியல் தலைவர்களும் ஒரே அணியில் திரண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவை, கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சரும், கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சிவராஜ் தங்கடகி தலைமையில், கொப்பால் எம்.பி., ராஜசேகர் பசவராஜ் ஹிட்னால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கொப்பால் ராகவேந்திரா ஹிட்னால், யலபுர்கா பசவராஜ் ராயரெட்டி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கங்காவதி ஜனார்த்தன ரெட்டி, குஷ்டகி தொட்டனகவுடா பாட்டீல் மற்றும் போராட்ட குழுவினர் சந்தித்துப் பேசினர்.

தொழிற்சாலை அமைப்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, முதல்வரிடம் எடுத்துக் கூறினர். அனைத்தையும் பொறுமையாக கேட்ட முதல்வர், கொப்பால் கலெக்டர் நளின் அதுலை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இரும்பு தொழிற்சாலை பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

Advertisement