'கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்'

இடைப்பாடி: இடைப்பாடி அருகே செட்டிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் மாணவரான, அரசிராமணி டவுன் பஞ்சாயத்து தலைவர் காவேரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார்.


அதில் மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது: மனிதர்களுக்கு வயதாகும்போது அவர்களது திறன் குறைகிறது. இப்பள்ளிக்கு வயது அதிகமாகும்போது இளமை கூடுகிறது. இப்பள்ளி முன்னாள் மாணவர்கள், கல்வி அறக்கட்டளை தொடங்கி அதில் ஒற்றை பெற்றோருடைய மாணவ, மாணவியர் கல்வி பயில உதவுவதோடு, அவர்களை உளவியல் ரீதியாக உற்சாகப்படுத்தி, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும். மேலும் நம் நாட்டுக்கு, 2 லட்சம் டிரைவர்கள் தேவை. அதனால் ஓட்டுனர் பயிற்சி, மின்னணு சாதன பழுதுபார்ப்பு பயிற்சிகளை, இக்கிராம இளைஞர்கள், பெண்களுக்கு கற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முன்னாள் மாணவர்களான ஓய்வு பெற்ற சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆனந்தன், ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திரமோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement