தேசிய கல்விக் கொள்கையால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்

அன்னுார்: 'தேசிய கல்விக் கொள்கையால் மாணவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும்,' என பா.ஜ., மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அன்னுாரில் தெரிவித்தார்.

மூக்கனுாரில் ஜனசேவா அலுவலகத்தில் நடந்த விழாவில் அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கையால், சர்வதேச அளவில் கல்வித்தரம் உயரும். இதன் மூலம் வாழ்க்கை கல்வியையும் கற்றுக் கொள்ள முடியும். தாய் மொழியுடன் ஆங்கிலமும் மூன்றாவதாக நமக்கு விருப்பமுள்ள மொழியையும் கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவது மொழியாக ஹிந்தி தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தேசிய கல்விக் கொள்கை குறித்து சரியான புரிதல் இல்லாததால் சிலர் எதிர்க்கின்றனர். வசதியுள்ள மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளை கற்கும் வாய்ப்பு தற்போது உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையால் சாதாரண ஏழை, நடுத்தர மாணவனும் அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியை கற்க முடியும். வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியும். கூடுதலாக வேலை வாய்ப்பு பெற முடியும், என்றார்.

நிகழ்ச்சியில் ஜனசேவா நிர்வாகிகள் தனபால், ஜெயராமன், அசோக்குமார், தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement