17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை

திருப்பூர், : பதினேழு வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெருமாநல்லுாரில் கடந்த, 9ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக, 'சைல்டு ஹெல்ப்லைன்' எண்ணுக்கு காலை, 8:15 மணிக்கு தகவல் தெரிய வந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டதும்; அவருக்கு விருப்பமில்லாத நிலையில், 25 வயதான தாய்மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிந்தது.

இதனை தொடர்ந்து, சிறுமியை மீட்டு, காப்பகத்தில் தங்கவைத்தனர். திருமணத்தை நடத்திய இருதரப்பு குடும்பத்தார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement