விழுப்புரம் புத்தக திருவிழாவில் ரூ.60 லட்சம் புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த 3ம் ஆண்டு புத்தக திருவிழாவில் ரூ.60 லட்சம் அளவில் புத்தகங்கள் விற்பனையானது.

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பில், 3ம் ஆண்டு புத்தக திருவிழா, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் கடந்த 2ம் தேதி தொடங்கி, 12ம் தேதி வரை நடந்தது. கடந்த 11 நாட்களாக, தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை புத்தக திருவிழா நடந்தது. அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார்.

இதில், பல்வேறு நிறுவனங்களில் 60 புத்தக அரங்குகள், துறைசார்ந்த அரங்குகள், உள்ளூர் படைப்பாளிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டது. பாரம்பரிய உணவு அரங்குகள், தோட்டக்கலைத்துறை, காவல்துறை, கல்வித்துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய குழு, தீயணைப்பு துறை, சிறைத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் விழிப்புணர்வு அரங்குகளும் அமைக்கப்பட்டன.

முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, திண்டுக்கல் லியோனி, ரவிக்குமார் எம்.பி., கவிஞர் அறிவுமதி, பாரதி பாஸ்கர், சுந்தர ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு சொற்பொழிவாற்றினர். கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட நூலக அலுவலர் காசீம் உள்ளிட்ட குழுவினர், புத்தக திருவிழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பில், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார். மாணவர்கள், பொது மக்கள் என 2 லட்சம் பேர் வரை வந்து புத்தகங்களை வாங்கி சென்றனர். அரங்கில் ரூ.50 லட்சம் அளவில் புத்தகங்கள் விற்றதாகவும், மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்காக ரூ.10 லட்சம் அளவில் புத்தகங்களை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement