எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

மதுரை : எச்சில் இலையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் நடத்த அனுமதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதியின் உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
கரூர், நவீன்குமார் 2024ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மண்மங்கலம் அருகே நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபாவில், அவரது ஜீவ சமாதி தினத்தை முன்னிட்டு 2024 மே 18ல் அன்னதானத்தின் போது, பக்தர்கள் உணவு உட்கொண்ட பின் எச்சில் இலைகளில் நேர்த்திக்கடனாக உருளும் அங்கப்பிரதட்சணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னதானம், அங்கப்பிரதட்சணம் நடத்த அனுமதிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த, 2024 மே 17ல் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு:
தமிழகத்தின் முக்கிய துறவிகளில் ஒருவர் சதாசிவ பிரம்மேந்திரர். ஜீவ சமாதி நாளில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வாழை இலைகளில் உருண்டு கொடுத்தல். 120 ஆண்டுகள் பழமையான சடங்கு, 2015ல் நிறுத்தப்பட்டது. அனுமதி கோரி, அதிகாரிகளுக்கு மனுதாரர் மனு அனுப்பினார்; பதில் இல்லை.
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி, ஆண்டு முழுதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர் ஒரு சித்த புருஷர். ஜீவ சமாதி தினத்தன்று, பக்தர்கள் உணவு உட்கொண்ட பின், வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது ஆன்மிக பலனை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மகாபாரத காலத்திலும் கூட, சாப்பிட்ட இலையில் உருண்டு கொடுப்பது ஆன்மிக பலனாக கருதப்பட்டது. இவ்வழக்கில் அதிகாரிகள் அனுமதி வழங்குவது குறித்த கேள்வி எழவே இல்லை. விருந்தினர்கள் உணவு உட்கொண்டபின் வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடிப்படை உரிமையை மனுதாரர் பயன்படுத்த முடியும். இதில், அதிகாரிகள் தலையிட முடியாது. இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
இதன்படி 2024 மே 18ல் நிகழ்ச்சி நடந்தது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, கரூர் கலெக்டர், திருவண்ணாமலை அரங்காநாதன் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
கலெக்டர், அரங்கநாதன் தரப்பு: நெரூர் கோவிலில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்வதை, 2015ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு தடை செய்துள்ளது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. அந்த உத்தரவே இறுதியானது. நெரூர் கோவிலில், 2015 முதல் அவ்வழக்கம் நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலில் இதுபோல், 500 ஆண்டுகளாக நடந்த பழமையான சடங்கு மேற்கொள்ள, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
எச்சில் இலையில் உருள அனுமதித்தால் பக்தர்களின் உடல்நலம் பாதிக்கும். சுகாதார பாதிப்பு ஏற்படும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பு: அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் மத உரிமை அடிப்படை உரிமை என்பதால், அதை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியாது.
உணவு சாப்பிட்ட பின் எச்சில் வாழை இலைகளில் உருண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது எந்த வகையிலும் பொது ஒழுங்கு அல்லது நெறிமுறைகளை பாதிக்காது. உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
சதாசிவ பிரம்மேந்திரர் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். அவரை பின்பற்றும் பக்தர்கள் தங்கள் குரு நல்வாழ்வை அளிப்பார் என நம்புகின்றனர். அவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, இத்திருவிழாவை நடத்த விரும்புகின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: இது ஒரு மதத்தின் பழக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நடைமுறையாகவோ இருக்கலாம். இதனால் பொது ஒழுங்கு அல்லது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
இந்நடைமுறை பொது ஒழுங்கு அல்லது அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானதா என்பதற்கு தீர்வு காண வேண்டியுள்ளது. அதை தற்போது இந்நீதிமன்றத்தால் முடிவு செய்ய இயலாது.
இதுபோன்ற விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கர்நாடகா கோவிலில் எச்சில் வாழை இலையில் உருண்டு கொடுக்கும் வழக்கத்திற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அது இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை நெரூரில் எச்சில் இலையில் உருண்டு கொடுக்கும் அங்கப்பிரதட்சணம் நடத்த அரசு அனுமதியளிக்கக்கூடாது.
நெரூர் கோவில் விவகாரத்தில், 2015ல் இந்நீதிமன்ற உயர்ந்தபட்ச இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு இறுதியானது. அதை செல்லாது என தனி நீதிபதி மாற்றியமைக்க முடியாது. தனி நீதிபதியின் முடிவை இந்நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது; நியாயமற்றது. அது ரத்து செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.













மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!