நெய்வேலி என்.எல்.சி.,க்கு வெடிகுண்டு மிரட்டல் 

நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி., அலுவலகங்களில் ஆர்.டி.எக்ஸ்., நிரப்பப்பட்ட மொபைல் குண்டுகளால் மிகப்பெரிய தாக்குதல் நடக்க போவதாக, இ-மெயிலில் மிரட்டல் வந்தது.

நேற்று முன்தினம் இரவு 7:24 மணிக்கு என்.எல்.சி., உயர் அதிகாரிகளுக்கு வந்த மிரட்டல் குறித்து என்.எல்.சி., பாதுகாப்பு படையினர் நெய்வேலி டி.எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செந்தில்குமார் மற்றும் போலீசார், மோப்ப நாய் உதவியுடன் என்.எல்.சி., மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அங்குள்ள தலைமை அலுவலகம், நகர நிர்வாக அலுவலகம், சுரங்க நிர்வாக அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

நெய்வேலியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையிலும் சோதனை நடத்தினர். அதில், வெடி குண்டுகள் எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இச்சம்பவத்தால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன், என்.எல்.சி., மருத்துவமனைக்கு வெடிகுண்டு புரளி வந்தது.

இதுபோன்ற தொடர் வெடிகுண்டு மிரட்டலால் என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement