மாசி விழா தெப்ப உற்சவம்: திருச்செந்துாரில் விமரிசை

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருவிழா நாட்களில் தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா நடந்தது. 10ம் திருவிழாவான 13ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவிழாவின் 11ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுவாமி அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபத்துக்கு வந்தனர். அங்கு இரவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.


தொடர்ந்து சுவாமி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தெப்ப உத்சவம் நடந்தது. வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளினர்.


சுவாமி மற்றும் அம்பாள் 11 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்ப உத்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement