பாக்., என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 9 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் பயங்கரவாதிகள் 9 பேர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகமந்த் மாவட்டத்தில், உளவுத்துறை தகவலின்பேரில் நேற்று இரவு, பாதுகாப்புப் படையினர் ஆய்வு நடவடிக்கைகளைமேற்கொண்டிருந்தனர். இந்த நடவடிக்கையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.பி.ஆர்., (ராணுவ தகவல் தொடர்பு சேவை) தெரிவித்துள்ளது. மற்றொரு என்கவுன்டரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இருவர் பலியானார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.பி.ஆர். அறிக்கை:

முகமந்த் மாவட்டத்தில், நடந்த என்கவுன்டரில் 7 பயங்கரவாதிகளும்,தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் மடி பகுதியில் நடந்த மற்றொரு மோதலில், பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு பாதுகாப்பு வீரர்களும் பலியாகினர்.

மாகாணம் முழுவதும் ஏராளமான பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement