15 முறை கன்னத்தில் அறை நடிகை ரன்யா ராவ் கதறல்:

பெங்களூரு :தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ், டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தன்னை கன்னத்தில் பல முறை அறைந்ததாகவும், உணவு வழங்க மறுத்ததாகவும், வெள்ளை காகிதத்தில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கைது
கன்னட நடிகை ரன்யா ராவ், கர்நாடகாவின் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில், பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின், கஸ்டடியில் இருந்த நடிகை ரன்யா ராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், கண்களுக்கு கீழே கருமையான திட்டுகளுடன், மன அழுத்தத்தில் அவர் இருப்பது போல தெரிந்தது.
இந்நிலையில், டி.ஆர்.ஐ., கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு, சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவ் கைப்பட எழுதிய கடிதம்:
நான் கைது செய்யப்பட்டது முதல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, டி.ஆர்.ஐ., அதிகாரிகளால் உடல் ரீதியாக தாக்கப்பட்டேன். என்னை, 10 - -15 முறை கன்னத்தில் அவர்கள் அறைந்தனர்.
அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். பல முறை தாக்கப்பட்ட போதும், அவர்கள் தயாரித்த அறிக்கைகளில் கையெழுத்திட மறுத்து விட்டேன். மிகப்பெரிய மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்பட்டதால், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தயாரித்த, தட்டச்சு செய்யப்பட்ட 50 பக்கங்களிலும், 40 வெள்ளை காகிதங்களிலும் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை.
அனுமதிக்கவில்லை
மார்ச் 3 மாலை 6:45 மணி - மார்ச் 4 இரவு 7:50 மணி வரை கஸ்டடியில் இருந்தபோது, எனக்கு வேண்டுமென்றே உணவு தரப்படவில்லை; துாங்கவும் அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான யு டியூப் பார்த்து, தங்கம் கடத்துவது எப்படி என அறிந்து கொண்டதாக ரன்யா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமையை அவர் பெற்றிருந்ததால் தான், அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரன்யா ராவின் தந்தையும், டி.ஜி.பி.,யுமான ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.


மேலும்
-
பா.ஜ., சார்பில்கையெழுத்து இயக்கம்
-
செங்கோட்டையனுக்கு கோரிக்கை விடுத்துகோபியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபர
-
மனைவி தற்கொலையில் கைதானவரை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்
-
அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்
-
கஞ்சாவுடன் இருவர் கைது
-
மதுராந்தகம் ஆலையில் 4,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்