நடிகரின் மேலாளர் மரணத்தில் தொடர்பா? மறுக்கிறார் ஆதித்யா தாக்கரே

6

மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் மரணம் குறித்த விவகாரத்தின் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.


பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதில் சந்தேகம் உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். இதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர், ஜூன் 8ம் தேதியன்று, அவரது மேலாளர் திஷா சாலியன், வீட்டின் 14வது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்தார். இதனை Accidental Death Report எனற வகையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில் சம்பவம் நடந்து ஐந்தாண்டுகளுக்கு பிறகு, திஷாவின் தந்தை சதிஷ் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு ஒன்றில்,' திஷா மரணம் குறித்து புதிதாக விசாரிக்க வேண்டும். ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்வதுடன், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் எனக்கூறி உள்ளார்.


இது தொடர்பாக சதிஷ் கூறுகையில்,
எனது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆனால், சிலரை காப்பாற்றுவதற்காக அரசியல் நெருக்கடி கொடுத்து வழக்கு மூடி மறைக்கப்படுகிறது எனக்குற்றம் சாட்டினார்.


இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. எங்கள் தரப்பு நியாயத்தையும், வாதங்களையும் நீதிமன்றத்தில் வைப்போம் என்றார்.


சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:
மனுவில் என்ன உள்ளது என தெரியாது. அவுரங்கசீப் விவகாரத்தில் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுதாரருக்கு பின்னால் அரசியல் சக்தி உள்ளது. இனிமேல் அவுரங்கசீப் விவகாரத்தை விட்டுவிட்டு இதை பற்றி தான் பேசுவார்கள். இதற்கு பின்னால் யார் உள்ளார்கள் என வெளியில் சொல்ல முடியாது. தாக்கரே குடும்பத்தை அவமானப்படுத்த தொடர் முயற்சிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement