டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

60

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்து உள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், இதற்கும் தொடர்பில்லை. அவரை பணியிட மாற்றம் செய்வது என முன்னரே முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து உள்ளது.

டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகை விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தார். அந்த வேளையில், அவரது குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், நீதிபதியின் குடும்பத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனை பறிமுதல் செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அமைப்பில் உள்ள 5 உறுப்பினர் நீதிபதிகளும் ஒருமனதாக திட்டமிட்டுள்ளனர்.


டில்லியில் இருந்து அலகாபாத் ஐகோர்ட்டிற்கு யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்யவும் கொலிஜியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

விளக்கம்



இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தவறான மற்றும் வதந்தி பரவி வருகிறது.

டில்லி ஐகோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதியான யஷ்வந்த் சர்மாவை, அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்வது என முன்னரே எடுக்கப்பட்ட முடிவு. தற்போதைய நிகழ்வுக்கு அப்பாற்பட்டது. பணியிட மாற்றம் குறித்த முடிவை, நேற்று ( மார்ச் 20) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் ஆய்வு செய்தது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதியஷ்வந்த் வர்மாவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து வந்த பதிலை பொறுத்து, கொலிஜியம் ஒரு தீர்மானத்திற்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


ஆனால், அவரை ஏற்க முடியாது எனக்கூறி அலகாபாத் ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அதேவேளையில், ஒரு சிலரோ, நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய யஷ்வந்த் வர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவரை பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். அலகாபாத் ஐகோர்ட் என்ன குப்பைத் தொட்டியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

யார் இவர்



கடந்த 1969 ம் ஆண்டு ஜன.,6 ல் பிரயாக்ராஜ் நகரில் பிறந்தவர் யஷ்வந்த் வர்மா.

டில்லி பல்கலை.யின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், ம.பி.,யின் ரேவா பல்கலையில் சட்டப்படிப்பு படித்தார்.

1992 ஆக., 8 ல் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

அலகாபாத் ஐகோர்ட்டில் மாநில அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.

2014 ல் அதே ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2016 ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர் அரசியலமைப்பு, தொழிலாளர் பிரச்னை தொழிற்சாலை நிர்வாகம் , மாநகராட்சிகள் மற்றும் வரிகள் குறித்த வழக்குகளை விசாரித்து வந்துள்ளார்.




தீயணைப்புத்துறை திடீர் பல்டி





இதற்கிடையே நீதிபதி வீட்டில் அப்படி ஏதுவும் பணம் கண்டெடுக்கவில்லை என தீயணைப்புத்துறை திடீரென பல்டி அடித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அத்துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியது, சம்பவம் அறித்து அவரது வீட்டின் ஸ்டோர் ரூம்மில் பற்றிய தீயை 15 நிமிடம் போராடி அணைத்தோம் இதில் தீயில் கருகிய பொருட்களை மீட்டபோது ஸ்டேஷனரி பொருட்கள் இருந்தன. பணம் எதுவும் கண்டெடுக்கவில்லை என்றார்.

Advertisement