டி.சி.எஸ்., 10 கே ஓட்டப்பந்தயம் ஏப்ரல் 27ல் துவக்கம் 

பெங்களூரு,: உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், டி.சி.எஸ்., 10 கே ஓட்டப்பந்தயம், ஏப்ரல் 27ம் தேதி துவங்குகிறது.

உடற்பயிற்சி, ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், டி.சி.எஸ்., 10 கே ஓட்டப்பந்தயம், பெங்களூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஓட்டப்பந்தயம், ஏப்ரல் 27 ம் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான 'டி - ஷர்ட்' அறிமுக விழா பெங்களூரில் நடந்தது.

டி.சி.எஸ்., பெங்களூரு மண்டல தலைவர் சுனில் தேஷ்பாண்டே கூறுகையில், ''உடற்பயிற்சி, ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், டி.சி.எஸ்., 10 கே ஓட்டப்பந்தயம், ஏப்ரல் 27ல் நடக்கிறது. இதுவரை 30,000 பேர், தங்கள் பெயரை பதிவு செய்து உள்ளனர்.

''வரும் நாட்களில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும். ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்த உகாண்டா நாட்டை சேர்ந்த ஜோசுவா கிப்ருய் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று உள்ள இந்திய தடகள வீரர் ஜோஸ்வாவும் பங்கேற்கிறார்,'' என்றார்.

ஹாக்கி வீரர் மந்தீப் சிங் பேசுகையில், ''டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தருணத்தை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். எனது தலைமையில் இந்திய அணி அந்த சாதனையை நிகழ்த்தியது பெருமையான தருணம். 41 ஆண்டுகளுக்கு பின் இந்தியா ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அந்த தருணத்தை நாங்கள் மறக்க மாட்டோம்.

அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நம்பிக்கையின் பாதையை காட்டியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.

கர்நாடக தடகள அசோசியேஷன் செயலர் ராஜவேலு, சமர்த்தனம் டிரஸ்ட் நிறுவனர் மகாந்தேஷ் கிவதசண்ணவர், சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ், வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியா, விளையாட்டு துறை செயலர் ரன்தீப் கலந்து கொண்டனர்.

Advertisement