நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

உத்திரமேரூர், மார்ச் 23--
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 37,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் யாராவது இறந்தால், அவர்களை அப்பகுதிகளில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு அடக்கம் செய்யும்போது போதிய இடவசதி இல்லாமல், அப்பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதை தவிர்க்க பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 2021 --- 22ம் நிதி ஆண்டில், பேரூராட்சி மூலதன நிதி, 1.50 கோடி செலவில், மேல்கட்டம்மன் கோவில் பின்புறம், புதிய எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது.
நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், தகன மேடையில் உள்ள எரியூட்டும் இயந்திரங்கள் துருப்பிடித்து, பழுதாக வாய்ப்பு உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியில், 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்தி, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிட்டு செல்கின்றனர்.
எனவே, எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:
உத்திரமேரூர் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல்களை கேட்டுள்ளோம். உடல்கள் வந்தவுடன், எரியூட்டி, சோதனை ஓட்டம் நடத்திய பின், நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.