'மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல்'

பெங்களூரு : மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என, ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துஉள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அரசு ஒப்பந்தங்களை வழங்கும்போது, முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுகீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது அரசியல் சட்டத்தை மீறும் செயல் என ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபெலே தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தில், மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது. அதைச் செய்பவர்கள் அம்பேத்கரின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுபவர்கள். ஏற்கனவே, ஒருங்கிணைந்த ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் மத ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தன. அவுரங்கசீப் கல்லறை விஷயத்தில், ஆக்கிரமிப்பாளர்களின் மனநிலையில் இருப்பவர்கள், நம் நாட்டுக்கு அபாயமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளனர்.

இந்தியாவின் உயரிய கலாசாரம், பண்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பவர்களுடன் நாம் இருக்க வேண்டும். சமூக கட்டமைப்பில் இன்னும் ஏராளமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மீதான வன்முறை தடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றத்தை இன்னும் எட்டவில்லை. அரசியலில் இருப்பவர்கள், அரசியல் விவாதங்களில் தினந்தோறும் அறிக்கைகள் விடலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் அதுபோன்று செயல்பட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement