10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பட்டினி போராட்டம்

நாமக்கல்: ஜாக்டோ - ஜியோ சார்பில், ஆசிரியர், அரசு ஊழியர்களின், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பட்டினி போராட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர், முருகன், அருள்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சசிகலா பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில், 30 சதவீதத்திற்கு அதிகமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இடைநிலை ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் இழைக்கப்படும் அநீதி களைய வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பின், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement