அடகு வைத்த நகைகள் மாயம்; வங்கி மேலாளர், 3 பேர் மீது வழக்கு

கோலார் : வேம்கல் மத்தேரி கனரா வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. வங்கி மேலாளர் சந்திரசிங் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


வேம்கல் அருகே உள்ள மத்தேரியில் கனரா வங்கியின் கிளை உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் நகைகள் அடகு வைக்கும் வசதியும் உள்ளது. மத்தேரி கனரா வங்கி கிளையில் எம்.வி. ஹரீஷ் குமார், ஆர்.என். சோபா சம்பத்குமார், சீதாலட்சுமி, மஞ்சலம்மா, மஞ்சுநாத், உஷாராணி, என். நித்தின் ஆகியோர் 37.54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்திருந்தனர்.


இவற்றை மீட்க, அவர்கள் பணம் செலுத்தியபோது, சம்பந்தப்பட்டவர்களுக்கு சொந்தமான நகைகள் மாயமானதாக கூறப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து வங்கி கிளையில் பெருமளவில் மோசடி நடந்துள்ளதாக பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் புகார் செய்தனர்.


இந்த புகார் குறித்து, தலைமை வங்கியின் உதவி பொது மேலாளர் அசோக் குமார் விசாரணை நடத்தினார். நகைகள் மாயமானது குறித்து போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.


இதன்படி, நேற்று மத்தேரி கனரா வங்கி கிளையின் மேலாளர் சந்திர சிங் மற்றும் மது, ராவத் மகேஸ்வர ராவ், மஞ்சுநாத் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


இதற்கிடையில், சில வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு மாற்றாக வேறு நகைகளை வங்கி கிளை நிர்வாகத்தினர் காண்பித்துள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement